மதங்கள் குறித்து அவதுாறாகப் பேசி மதக் கலவரத்தைத் துாண்டிவிடுவதாக சாமியார் சிவக்குமார் மீது புகார்கள் குவிந்து வரும் நிலையில், திருச்சியில் காவல்நிலையம் முன்பு சாமியார் கொடுத்த அலப்பறையால் போலீசார் எரிச்சல் அடைந்துள்ளனர். சென்னை புழல் புத்தகரத்தைச் சேர்ந்தவர் 55 வயதான சாமியார் சிவக்குமார். யோகக்குடில் என்ற பெயரில், புத்தகரத்தில் ஆசிரமம் நடத்தி வருகிறார். திண்டுக்கல் நிலக்கோட்டை அருகே ஏக்கர் கணக்கில் நிலங்களை வாங்கி அங்கும் ஆசிரமம் கட்டி வருகிறார். மதங்களை மறுத்து மனிதநேயம் வளர்ப்பதுதான் தனது ஆன்மீக பிரசாரத்தின் நோக்கம் என்று கூறி வருகிறார். வல்லரசு என்ற பெயரில் கட்சியையும் தொடங்கி நடத்தி வருகிறார்.

சென்னைத் தமிழில், பல மதங்களைப் பற்றி அருவெறுக்கத் தக்க வகையில் கொச்சையாக இவர் பேசிய வீடியோக்கள், இவரது ஆசிரம யூடியூப் பக்கத்தில் குவிந்து கிடக்கின்றன. ஏற்கனவே சைவ சித்தாந்தம், சிவபெருமான் குறித்து அவதுாறாகப் பேசியதாகக் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்று வெளியே வந்தவர் இவர். இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் இயங்கி வரும் மெய்வழிச் சாலை பற்றி அவதுாறாக பேசி யூடியூபில் வீடியோ வெளியிட்டதாக 80க்கும் மேற்பட்ட புகார்கள் குவிந்துள்ளன.

புகார்களின் அடிப்படையில், மதக் கலவரத்தைத் துாண்டுதல், கொலைக்கு நிகரான குற்றத்தை செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் உறையூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில், புதன்கிழமை உறையூர் காவல்நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரானார் சாமியார் சிவக்குமார். அவருடன் புள்ளிங்கோ சாமியார் என்ற பெயரில் ஒரு சாமியார், 20க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன், கழுத்தில் மலர் மாலை, கண்ணில் கூலிங் கிளாஸ் சகிதம் காவல்நிலையத்தில் ஆஜாரானார் சிவக்குமார்.

அவரது ஆதரவாளர்கள் அனைவரும் காவல்நிலையத்திற்குள் நுழைய முயன்றனர். மேலும், காவல் நிலையத்திற்குள்ளேயே தங்கள் செல்போன்களில் படம் பிடித்து, யூடியூபில் நேரடி ஒளிபரப்பும் செய்தனர். இதற்கு காவல்துறையினர் கடும் எதிர்ப்பை தெரிவித்ததை அடுத்து, காவல் நிலையத்தில் இருந்து சிவக்குமாரும், அவரது ஆதரவாளர்களும் வெளியேறினர். காவல்நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட அவர்கள் முயன்றபோது, போலீசார் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, போராட்ட முடிவை கைவிட்டனர்.

அதன்பின்னர், இன்ஸ்பெக்டர் சண்முகவேல், சிவக்குமாரிடம் வழக்கு குறித்து விசாரணை நடத்தினார். சாமியார் கொடுத்த அலப்பறையால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து சாமியாரிடம் கேட்டபோது நான் அப்படித்தான் பேசுவேன் என்றும், மத மறுப்பாளர்களுக்கு மட்டும் தான் பேசுகிறேன் என்றும் கூறினார்.

3 மணிநேரம் காவல்நிலையத்தில் சாமியார் காத்திருந்த நிலையில், புகார் அளித்தவர்கள் வராததால், மீண்டும் அழைக்கும் போது வர வேண்டும் என போலீசார் சாமியாரையும் அவரது ஆதரவாளர்களையும் திருப்பி அனுப்பி விட்டனர். கருத்து சுதந்திரம் என்ற பெயரில் சர்ச்சைக்குரிய பேச்சுகளை வெளியிடுவது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. அதில் தற்போது சாமியார் சிவக்குமாரும் சிக்கியுள்ளார். விசாரணையின் போக்கு எப்படி இருக்கும் என்பது போகப் போகத் தான் தெரியும்.

About The Author