சென்னையில் உள்ள பையனூரில் சசிகலாவின் நிலம் மற்றும் பங்களாவை பினாமிதடுப்பு சட்டத்தின் கீழ் வருமானவரித்துறை
முடக்கி உள்ளனர்.
2017 ஆம் ஆண்டு சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினருடன் தொடர்புடையவர்களுக்கு சொந்தமான 187 இடங்களில் வருமானவரித்துறை மெகா ரெய்டு நடத்தியது. அந்த சோதனையிலும், அதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையிலும் சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில் பினாமிகள் கண்டறியப்பட்டு, அவர்களின் சொத்துக்களை வருமானவரித்துறை தொடர்ந்து முடக்கி வருகிறது. முதல்கட்டமாக சென்னை, கோவை, புதுவையில் உள்ள 1600 கோடி மதிப்புள்ள 9 சொத்துக்கள் முடக்கப்பட்டன.
இரண்டாவது கட்டமாக, போயஸ் தோட்டம், தாம்பரம், சேலையூர், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பகுதியில் அமைந்துள்ள 300 கோடி ரூபாய் சொத்துக்களை வருமானவரித்துறை முடக்கியது. மூன்றாவது கட்டமாக, 2000 கோடி ரூபாய் சந்தை மதிப்புள்ள கொடநாடு எஸ்டேட், சிறுதாவூர் பங்களா ஆகியவற்றை வருமானவரித்துறை அதிகாரிகள் முடக்கி நோட்டீஸ் ஒட்டினர்.
தற்போது சென்னையை அடுத்த பையனூரில்
பழைய மகாபலிபுரம் சாலையில் இருக்கும் சசிகலாவுக்கு சொந்தமான 49 ஏக்கர் நிலத்தையும், அங்குள்ள பங்களாவையும் வருமானவரித் துறை பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் முடக்கியுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வரும் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்