தமிழகத்தில்
47-வது தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் பொறுப்பேற்க உள்ளார்!

தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் மத்திய மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை செயலாளராக பணியாற்றி வந்த ராஜீவ் ரஞ்சன். தற்போது தலைமைச் செயலாளராக இருந்த சண்முகம் இன்றுடன் ஓய்வு பெற்று தமிழக அரசின் ஆலோசகராகத் தற்காலிகமாக நியமிக்கப்படுகிறார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதமே தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து சண்முகம் ஓய்வு பெற்றிருக்கவேண்டும். ஆனால், அக்டோபர் மாதம் வரை ஒருமுறையும் ஜனவரி மாதம் வரை இரண்டாவது முறையும் என இருமுறை சண்முகத்திற்கு பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில் மத்திய மீன்வளம், கால்நடைத்துறையில் பணியாற்றி வந்த ராஜீவ் ரஞ்சன், அடுத்த தலைமைச் செயலாளராகப் பதவி ஏற்கவுள்ளார். நாளை காலை 7 மணிக்குத் தமிழகத்தின் 47-ஆவது தலைமைச் செயலாளராக ராஜீவ் பதவியேற்பார். 60 வயதான ராஜீவ் எம்.எஸ்.சி, எம்.பி,ஏ பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசின் தற்காலிக ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள சண்முகத்திற்கு மாதம் ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் சம்பளம் நிர்ணயம் செய்திருக்கிறது அரசு. நாளை முதல் சண்முகமும் புதிய பொறுப்பை ஏற்றுக்கொள்வார் எனத் தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்

About The Author